குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்

குளித்தலை:குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில், 300 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் குளித்தலை, முசிறி, தொட்டியம், மாயனுார், தோகைமலை, நச்சலுார், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.மேலும், இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் சிறப்பாக செயல்படுவதால் அதிகளவு கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகளில் தினந்தோறும் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள், இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், உரிய சிகிச்சை பெற முடியாமல், கட்டாயப்படுத்தி நோயாளிகளை திருச்சி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பு வைக்கும் அவலம் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உரிய மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement