கூரியரில் நியூசிலாந்துக்கு ரூ.5 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் ஒருவர் கைது

1

சென்னை: மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை சென்னையில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; கூரியரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 21ம் தேதி இரு பார்சல்களை சோதனையிட்ட போது, தரை விரிப்புகள் மற்றும் துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ எபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்த முகவரி மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூலை 23ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், ஹமீத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது இருப்பிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பார்சல் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள், டிஜிட்டல் எடை இயந்திரம், ஹீட்-சீலிங் இயந்திரங்கள் , போலி அடையாள அட்டைகள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிறகு, ஹமீதிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜூலை 25ம் தேதி மஹாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் மற்றொரு கூரியர் பார்சலை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலிருந்து பெட்ஷீட்கள் மற்றும் போட்டோ பிரேம்களின் அடுக்குகளுக்கு நடுவே மறைக்கப்பட்டிருந்த 3.99 கிலோ எபெட்ரின் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம், மொத்தம் 10.99 கிலோ எபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடியாகும்.

இந்த சர்வதேசக் கடத்தல் கும்பல் சென்னையிலிருந்து இயங்கி வந்துள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சர்வதேசக் கூரியர்களை அனுப்பி வந்துள்ளனர்.

Advertisement