வினாத்தாள் கசிய விட்டால் 10 ஆண்டு சிறை; இன்று தாக்கலாகிறது சட்டதிருத்த மசோதா

5



- நமது சிறப்பு நிருபர்-




தேசிய அளவிலான அரசு போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்கிறது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வினாத்தாள் கசிவை தடுக்க, ஏற்கனவே உள்ள, 'பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் - 2024'ல் திருத்தம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசின் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், 2024ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தில், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண, மாநிலங்கள் முழுதும் பிரத்யேக விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன. லோக்சபாவில் இன்று (ஜூலை 27) இந்த சட்ட திருத்த மசோதாவை பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தாக்கல் செய்கிறார்.

வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்ட திருத்த மசோதாவும் அறிமுகமாகவுள்ளதால், 'நீட்' வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தங்கள் என்னென்ன?

* தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்வு.

* அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.

* தனி நபர் குற்றங்களுக்கான அபராத தொகை, 10 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வினாத்தாள் கசிவை வலையமைப்பாக செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை, ஐந்து ஆண்டில் இருந்து ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

* இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம், 1 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்வு.

* தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகள் வினாத்தாள் கசியவிட்ட புகாரில் சிக்கினால், 5 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்

* அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது

* நிறுவனத்தின் இயக்குநர்கள், மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

* வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் இரு மாதங்களில் முடிக்க காலவரையறை

* ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களில் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்

* விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்


@block_G@

அழைப்பு

அனைத்து எம்பிக்களும் பங்கேற்க, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்து உள்ளார். அவரது பதிவு; இளம் தலை முறையினரின் குரலைக் கேட்டறிந்த பின்னரும், மாணவர்களின் எதிர்காலத்திற்காக பிரதமர் மோடி எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைக் கருத்தில் கொண்டும், பொதுத் தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க திருத்த மசோதா மீதான விவாதத்தில் அனைத்து எம்பிக்களும் பங்கேற்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். block_G

Advertisement