பட்டா இடத்தை அளவீடு செய்ய வேண்டும்: மா.கம்யூ. போராட்டத்தில் 'தள்ளுமுள்ளு'

பெருமாநல்லுார்: திருப்பூர் அருகே பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி, மா.கம்யூ. மாநில தலைவர் சண்முகம் தலைமையில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில், 1994-ம் ஆண்டு 122 ஏழை குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், பட்டா நிலங்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து ஒப்படைக்காததால், பயனாளிகள் 36 ஆண்டுகளாக குடியேற முடியாமல் உள்ளனர்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, மா.கம்யூ. மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று 300-க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தாசில்தார் விளக்கம் அவிநாசி தாசில்தார் ஜெகநாதன், ''பட்டா நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், குத்தகைத் தொகை செலுத்தாததாலும், ஆறு மாதங்களுக்குள் குடியேறாததாலும் பட்டா காலாவதியாகிவிட்டதாக,'' கூறினார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த கட்சியினர், பட்டா நிலத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர்.அதனை தொடர்ந்து, தடுப்புகளை தள்ளி முன்னேறிய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன்பின், ஆர்.டி.ஓ. சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி, ''இரண்டு வாரங்களுக்குள் நிலத்தை அளவீடு செய்து தகுதியானவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என உறுதியளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Advertisement