உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி

25



நமது நிருபர்




அப்துல் கலாமின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாமின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கிடையே நிருபர்களிடம், ''கலாம் ஐயாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மாணவன் நான்.

இன்று கலாம் ஐயாவின் வழியில் செல்கிறேன். அறிவியலும், ஆன்மிகமும் கலந்திருக்க வேண்டும் என்று விரும்பியர் அப்துல் கலாம் ஐயா. ஒரு குட்டித்தீவில் பிறந்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அப்துல் கலாம் நினைவிடத்தில் அண்ணாமலை மரியாதை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement