விநாயகர் சிலைகள் தயாரிப்புபணிகள் தீவிரம்

குறிஞ்சிப்பாடி: விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர் அகரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு கூடுதலாக காகித பொம்மை கைவினை தொழில்களும் செய்து வருகின்றனர்.

இங்கு கடந்த சில ஆண்டுகளாக செய்யப்படும் விநாயகர் சிலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்தபட்டசம், 2 அடியில் தொடங்கி, 10 அடி வரை கலைநயமான விநாயகர் சிலைகள் அம்சமாக இங்கு தயார் செய்யப்படுகின்றன.

ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தற்போது விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த தயாளன், கூறியதாவது : எங்கள் தந்தை காலத்தில் இருந்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கடந்த, 15 ஆண்டுகளாக காகித கைவினை பொருட்கள் கொண்டு விநாயகர் சிலைகள் செய்து வருகிறோம்.

தை மாதம் துவங்கி, விநாயகர் சிலைகள் பணிகள் இங்கு நடந்து வருகின்றன. மரவள்ளிக்கிழங்கு மாவு, பேப்பர் மாவு, மலைப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் மாவு ஆகியவை கொண்டு உடனடியாக, எளிதில் கரையும் வகையிலான பெரிய விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

சேலம், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கி வருகிறோம். கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இங்கிருந்து விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகளின் உயரத்திற்கு தகுந்த வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement