மாரந்தை வரத்து கால்வாய் சீரமைப்பு

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தையில் 256 ஏக்கரில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். மழை காலங்களில் கோலாந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் போது அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தளிர்தலை, மாரந்தை ஆகிய கண்மாய்க்கு பிரிந்து செல்லும் விதமாக கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.

சில ஆண்டிற்கு முன் கண்மாய் வரத்து கால்வாய்களை துார்வாரும் பணியில் ஈடுபட்ட சருகணியாறு வடிநில கோட்ட அதிகாரிகள், கோலாந்தியில் இருந்து தளிர்தலை கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து கால்வாயை மட்டுமே துார்வாரினர்.

மாரந்தை கிராம கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்து கால்வாயை துார்வாராமல் கோலாந்தி கண்மாயில் இருந்து வரும் மழை நீர் மாரந்தை கண்மாய்க்கு செல்ல முடியாத வகையில் அடைத்து விட்டதாக விவசாயிகள் புகார் கூறினர்.

மாரந்தை கண்மாய்க்கு செல்லும் கால்வாயை சீர்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.

மாரந்தை கண்மாய்க்கும் நீர் செல்லும் விதமாக கால்வாயை சீர்படுத்தி தர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மாரந்தை கிராம விவசாயிகள் நேற்று முன்தினம் சிவகங்கை பொதுப்பணித்துறை சருகணியாறு வடிநில கோட்ட அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையிலான பொறியாளர்கள் நேற்று காலை மாரந்தை கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை துார் வாரினர்.

Advertisement