கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முறைகேடு; செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்

17

கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.டி.ஐ ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று, மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 2,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. கரூரில் இருந்து 13 சுயேச்சைகள் கோவை தெற்கில் போட்டியிட்டனர். தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய், டோக்கன் விநியோகம் செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

கோவை தெற்கில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் மனு அளித்திருந்தார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஈஸ்வரன் தேர்தல் கோப்புகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக 48 புகார்கள் கொடுக்கப்பட்டது. இரண்டு புகார்களில் மட்டும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஒரு புகாருக்கு சி.எஸ்.ஆர் கொடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடந்த இரு சம்பவங்களில் ஒரு லட்சத்து 86,000 ரூபாய், 42,500 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தலா ஒருவரை கைது செய்துள்ளனர்.

வெரைட்டி ஹாலில் அளிக்கப்பட்ட புகாரில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தியதாக கூறியுள்ளனர். இந்த 7 பேருமே கரூரை சேர்ந்தவர்கள். இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகிறது.

டோக்கன் விநியோகம் தொடர்பாக 9 வழக்குகளை (தி.மு.க. 8, அ.தி.மு.க. 1) பதிவு செய்து சி.எஸ்.ஆர் கொடுத்துள்ளனர். இந்த அனைத்து புகார்களுமே ஏப்ரல் 19, 20, 21 ஆகிய கடைசி 3 தேதிகளில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தான் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.

மற்ற புகார்களில் இதை முறையாக விசாரிக்கவில்லை. இதிலிருந்தே தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியாகிறது. பணப்பட்டுவாடா செய்யவில்லை என தேர்தல் அதிகாரிகள் புகாரை முடித்து வைத்தது தவறு. தேர்தல் ஆணையம் விசாரணை கமிஷன் அமைத்து முறையாக விசாரித்து செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement