பக்தர்களுக்கு வசதிகள்: முதல்வர் விஜய் உத்தரவு

4

சென்னை: 'கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, எவ்வித குறைபாடுமின்றி செய்து தர வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், 'ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்து திரும்புவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போதுமான எண்ணிக்கையில் கழிவறை அமைப்பதுடன், அவற்றை துாய்மையாக பராமரிக்க, போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோடை காலம் மற்றும் விசேஷ நாட்களில், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

'முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு, தரிசனத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில், தனி வழிகள் உருவாக்க வேண்டும். கோவில் வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும்' என, முதல்வர் கூறியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement