'இஸ்ரோவில் வேலைக்கு சேரணும்!'
செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளியான, கடலுாரைச் சேர்ந்த, 25 வயதாகும் பிருந்தா:
எங்கள் வீட்டில் நான், அக்கா, தங்கை என மூன்று பெண் குழந்தைகள். என் 10வது வயதில், அப்பாவுக்கு ஒரு பெரிய விபத்து. அவருக்கு நடப்பதே சிரமமாகி விட்டது. அவரது வருமானம் தான் எங்கள் வாழ்வாதாரம். வருமானம் குறைந்ததால், அம்மா தான், கிடைத்த வேலைகளைப் பார்த்து, குடும்பத்தை இப்போது வரை பார்த்துக் கொள்கிறார்.
நான் நான்காம் வகுப்பு படித்த போது, எனக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது தெரிந்தது. நான் நன்கு படிப்பேன்; அறிவியல் சார்ந்து படித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ'வில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால், பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. நான் கலங்குவதை பார்த்த அம்மா மிகவும் கஷ்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் வழங்கிய காது கேட்கும் கருவியை வாங்கி கொடுத்தார்.
ஆனாலும், பிளஸ் 2விற்கு பின் படிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகள் படிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் வீட்டிலேயே இருந்தேன். அதை பார்த்த அம்மா மிகவும் கவலைப்பட்டு, 'நீ போய் படி புள்ள... நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி, யார் யாரிடமோ உதவிகள் வாங்கி, என்னை கல்லுாரியில் சேர்த்து விட்டார்.
ஆனால், வயது வித்தியாசமும், மற்றவர்களின் பார்வையும், ஒரு மனத்தடையை உருவாக்கிக் கொண்டே இருந்தது. அதனால், கல்லுாரியில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தேன். தேசிய அளவில் நடந்த கருத்தரங்குகளுக்குச் சென்று, பரிசுகள் வாங்கினேன். பரிசாகக் கிடைத்த பணத்தின் வாயிலாகவே படிப்பையும் முடித்தேன்.
கல்லுாரி ஆசிரியர்கள், 'ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கென ஒரு தேர்வு இருக்கிறது; நீ முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்' என்று கூறி, புத்தகங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தினர். நேரங்காலம் பார்க்காமல் படித்து, நுழைவுத்தேர்வு எழுதி வெற்றியும் பெற்றேன்.
நான் எடுத்த மதிப்பெண்ணுக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.எஸ்சி., வேதியியல் கிடைத்தது. பச்சையப்பா அறக்கட்டளையில் இருந்து, 2 லட்சம் ரூபாய் கொடுத்தனர். அந்தத் தொகையை ஐ.ஐ.டி.,க்கு கட்டணமாக செலுத்தினேன்.
ஐ.ஐ.டி.,க்குள் நுழைந்த மாதிரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் நிச்சயம் சேர்ந்து, கை நிறைய சம்பாதித்து, என்னைப் போல் கஷ்டப்படும் தம்பி, தங்கைகளுக்கு உதவ வேண்டும்.