புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  புத்தாக்க பயிற்சி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு துவங்கியது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக மானிய குழுவின் மாலவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான 12 நாள் வேதியியல் புத்தாக்கப் பயிற்சி வகுப்பு துவங்கியது. மைய இயக்குநர் அருள் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு பேசுகையில், ‘அறிவியல் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான கற்றல் என்பது மிக முக்கியமானது.

அறிவைப் புதுப்பித்தல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதில் புத்தாக்கப் பயிற்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பங்கேற்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ என்றார்.

சிறப்பு விருந்தினர் ஹைதராபாத் பல்கலைக்கழக வேதியியல் பள்ளி  பேராசியர் சமர் தாஸ்  பேசியதாவது:

வேதியியல் என்பது பொருள் அறிவியல், நிலையான ஆற்றல் மற்றும் நானோ தொழில்நுட்பம் என, பல்துறை ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக விளங்கும் மைய அறிவியல் துறையாகும். சிறந்த ஆசிரியர்கள் முறையான தயாரிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களுடன் பயனுள்ள வகுப்பறை தொடர்பு மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆய்வக வசதிகளைப் பகிர்ந்து பயன்படுத்தி, பல்துறை அணுகுமுறைகளை மேம்படுத்துவது தற்போதைய அவசியமாகும்’ என்றார்.

தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில், தேசிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் மேம்பாடு குறித்து விளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரிம, கனிம, இயற்பியல் வேதியியல் மற்றும் பொருள் அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்பாடுகளை பேராசிரியர் பக்ததாஸ் செய்திருந்தார்.  உதவிப் பேராசிரியர் சுஜனா நன்றி கூறினார்.

Advertisement