'இவ்வளவு நெருக்கடியா?'

'ஆரம்பத்திலேயே அலற விடுகின்றனரே; போகப் போக என்னவெல்லாம் நடக்குமோ...?' என கவலைப்படுகிறார், காங்., அரசின் கர்நாடக முதல்வரான சிவகுமார்.

நீண்ட போராட்டத்துக்குப் பின், கடந்த ஜூன் 3ல் தான், சித்தராமையாவிடம் இருந்து, முதல்வர் பதவியை கைப்பற்றினார் சிவகுமார். அவருடன் சேர்த்து, 13 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.

கர்நாடக சட்டசபையில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், இன்னும் 20 அமைச்சர்களை நியமிக்கலாம். ஆனால், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதால், பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் விழிக்கிறார், சிவகுமார்.

அடுத்த பிரச்னையாக, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும்படி, கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், சட்டச் சிக்கல் இருப்பதாலும், நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார் சிவகுமார்.

தற்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதனால், 'முதல்வராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களில் இவ்வளவு நெருக்கடியா...?' என புலம்புகிறார், சிவகுமார்.

Advertisement