நல்ல நாளும் அதுவுமா 'சர்வர்' மக்கர்: பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி

கோவை: தமிழக பதிவுத்துறையில் 'ஸ்டார் 0.2' என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளுமளவுக்கு சர்வர் திறன் இல்லாததால் விசேஷ காலங்களிலும் புதன், வெள்ளிக்கிழமைகளிலும் பத்திர பதிவுப்பணிகள் சுணக்கமடைகின்றன.

நிலம் மற்றும் கட்டடம் குறித்த ஆவணங்களை பதிவு செய்ய, சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களின் உரிமை, விபரம் சரிபார்க்கப்படுகின்றன.

அந்த ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அரசு மின்னணு பதிவேட்டில் பதிவேற்றி, கணினியில் ஒப்புதல் பெற்று பதிவு செய்யப்படும்.

கோவையிலுள்ள 18 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அனைத்து முன் ஆய்வு மற்றும் பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்தன.

ஆனால் நேற்றும் ஆன்லைன் சர்வர் செயலிழந்ததால், ஆவணங்களை பதிவு செய்ய முடியவில்லை. ஆவண பதிவுகள் தாமதமடைந்து, பதிவு செய்ய வருவோர் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

தாமதத்தால், சொத்து வாங்குபவர், விற்பவர், வங்கிக் கடன் பெறுபவர், தொழில் நிறுவனத்தினர் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

பதிவுத்துறையின் ஆன்லைன் சர்வர் கட்டமைப்பை வலுப்படுத்தி, மாற்று சர்வர்(பேக் அப் சர்வர்) வசதியை ஏற்படுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் நிரந்தர கண்காணிப்பை அமல்படுத்தினால், இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

Advertisement