தனித்து விடப்பட்டவர் ஸ்டாலின் தான்: தவெக அமைச்சர் ரமேஷ் காட்டம்

11

திருச்சி: ''சட்டசபை நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தனித்து விடப்பட்டுள்ளார்,'' என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி: அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க வேண்டிய அவசியமில்லை. முதல்வர் விஜய் செயலில் காட்டக்கூடியவர்.

தனித்து விடப் பட்டவர் யார் என்றால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான். சட்டசபையில் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், தற்போது, சட்டசபை நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடி பார்க்கும் வகையில் தனித்து விடப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெறுப்பு அரசியலை விட்டு, வெற்றி பெறுவதை பற்றி பேசினால், உள்ளாட்சி தேர்தலில், சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

'ஊழல் வழக்குக்கு பயந்து, ஓடி ஒளியவில்லை' என்று சொல்லும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்; நீதிமன்றம் சொல்லும் உத்தரவுகளை தைரியமாக பின்பற்ற வேண்டியது தானே? ஊழல் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவர்.

கோவில்களில் பக்தர்களிடம் பணம் வாங்குவது நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலம் மோசடி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

ஹிந்து சமய அறநிலையத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிட ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.

Advertisement