அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டு விவகாரத்தில் 2 திடீர் திருப்பம் : புதிய இலாகா பட்டியலை வழங்க ரங்கசாமி முடிவு பிறந்தநாளில் கவர்னரை சந்தித்து சமூக தீர்வு
புதுச்சேரி: என்.ஆர்.காங்.,-பா.ஜ., இடையே ஆடுபுலி ஆட்டமாக நடந்து வந்த இலாகா ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வருகின்றது. புதிய இலாகா பட்டியலை கவர்னரை சந்தித்து அளிக்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.
புதுச்சேரி அமைச்சரவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜ.,வைச் சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு அமைச்சருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது.
கடந்த ஜூலை 20-ம் தேதி, அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை முறைப்படி தயார் செய்த முதல்வர் ரங்கசாமி, அதனை கவர்னர் கைலாஷ்நாதனின் ஒப்புதலுக்காக பரிந்துரைத்தார். ஆனால், பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களாகியும் கவர்னர் மாளிகையிலிருந்து ஒப்புதல் அளிக்கப்படாமல் காலதாமதம் நீடித்து வந்தது.
அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படாததால், துறை சார்ந்த முக்கியக் கோப்புகளில் முடிவெடுக்கவோ, மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடவோ இயலாத சூழல் உருவானது. இதனால் புதுச்சேரியின் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன. இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏக்கள், கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்டனர். அப்போது, ஓரிரு தினங்களில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று கவர்னர் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஆனாலும் இலாகா ஒதுக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி முதல்வர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கவர்னர் சந்தித்துப் பேசினார். இருப்பினும், உடனடியாக இலாகா அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் கவர்னர் கைலாஷ்நாதனை இன்று 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே தான் அனுப்பியிருந்த இலாகா பட்டியலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக புதிய இலாகா பட்டியலை வழங்க உள்ளார். இந்த புதிய பட்டியலை உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து அரசாணையாக வெளியாகிறது.
என்ன பிரச்னை:
கடந்த கூட்டணி ஆட்சியில் தங்கள் கைவசம் இருந்த 'பவர்புல்' துறைகளை இந்த முறையும் அப்படியே பெற பா.ஜ., விரும்புகிறது. குறிப்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் வகித்து வந்த உள்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றை மீண்டும் பா.ஜ.,விற்கே ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
ஆனால், முதல்வர் ரங்கசாமி அத்துறைக்கு பதிலாக வேறு புதிய இலாகாக்களை ஒதுக்கிப் பட்டியலைத் தயாரித்திருந்தார். இதனால் திருப்தியடையாத பா.ஜ., அமைச்சர்கள், முதல்வர் பங்கேற்ற அரசு விழாக்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தனர். சட்டசபை பக்கமும் அவர்கள் செல்லவில்லை. முதல்வரும் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அமைச்சர்கள் இலாகாக்கள் ஏதுமின்றி தொடரும் நிலை நீடித்தது.
வரும் 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வரவுள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். புதிய இலாகா பட்டியலை வழங்க உள்ளார்.
எனவே, பா.ஜ., எதிர்பார்க்கும் உள்துறை, தொழில்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை முதல்வர் விட்டுக்கொடுத்து, அவை பா.ஜ., அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த இலாகா ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வருகிறது.
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு