போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் பகுதிக்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

5

டில்லி சிறப்பு நிருபர்

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்த பாதுகாப்பான இடம் அல்ல என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம், 2012 நிர்பயா வழக்கு போராட்டம், 2023 மல்யுத்த வீராங்கனையரின் போராட்டம், சமீபத்தில் நடந்த, 'நீட்' தேர்வு போராட்டம் என, பல முக்கிய போராட்டங்களுக்கு சாட்சியாக விளங்கியது, தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதி.

இந்த பகுதியை போராட்டம் நடத்த பாதுகாப்பான இடம் அல்ல என்றும், அதற்கு பதிலாக மாற்று இடத்தை ஒதுக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர், 'ஜந்தர் மந்தர் பகுதி மிகக் குறுகிய நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை கொண்டது. பெருந்திரளான மக்கள் கூடும் போது அங்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அவசர மருத்துவ உதவிகளை செய்ய முடியவில்லை. சமீபத்தில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. அது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்பு கருதி மாற்று இடத்தை அடையாளம் காண வேண்டும்' என, வாதிட்டார்.

இதை கேட்ட அமர்வு, 'மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவு, வெளியேற்ற வழித்தட பிரச்னைகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் தொடர்பான கவலைகள் முக்கியமானவை. எனவே, இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் டில்லி காவல் துறையிடம் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உரிய விளக்கங்களை பெற வேண்டும்' எனக் கூறி, மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி குறித்த மனுதாரரின் கவலைக்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''சட்டம் - ஒழுங்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அவர்கள் அதில் தவறினால் நீதிமன்றத்தை அணுகலாம்,'' என்றார்.

Advertisement