பள்ளிக்கல்வி துறைக்கு நிதி குறைவா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

1

சென்னை: “த.வெ.க., ஆட்சியில் தான், பள்ளிக்கல்வி துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்து உள்ளார்.

கடந்த தி.மு.க., அரசு 2025 - 2026 பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போது 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சியில், பள்ளிக்கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஏறுமுகத்திலேயே இருந்தது.

'இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டை காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது' என சமூக வலைதள பதிவில் கூறி இருந்தார்.

இதற்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பதில்:
கடந்த 2025 - -26ம் நிதியாண்டில், தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கியதில், 42,351 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.

தி.மு.க.,வின் கடைசி பட்ஜெட்டான, 2026 - -27க்கான இடைக்கால பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்காமல், ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து, 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.

அதாவது, 2025- - 26ல் உண்மையாக செலவு செய்ததை விட, காரணமே இல்லாமல் 6,003 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஆனால், தற்போதைய த.வெ.க., ஆட்சியில், காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, தி.மு.க., அரசின் 2025 - -26 பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு செலவிட்டதை விட, 2,176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நிதித்துறை செயலர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

த.வெ.க., அரசால் ஒதுக்கப்பட்டுள்ள, 44,527 கோடி ரூபாயை, திறம்பட கையாண்டு, முழு பலன்களும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement