கவனம் செலுத்தலாமே : நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஆபத்துகள்: சிறிய வாகன ஓட்டிகளை காப்பதில் அலட்சியம்

2

மாவட்டத்தில் இருவழிப்பாதையாக இருந்த பல ரோடுகள் நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி மேலும் அகலமாக்கப்பட்டுள்ளது. இத்துடன் போக்குவரத்து அதிகரிப்பை கவனத்தில் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரை, நத்தம், திருச்சி, கரூர், பழநி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் நான்குவழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால் வாகனங்களின் வேகமும் அதிகமாக உள்ளது. சில இடங்களில் வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் சில வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாமல் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன.

கிராமப்புற ரோடுகளை பொறுத்தவரை அசாம்பவிதம் ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட வாய்ப்பு இருந்தாலோ, பள்ளி, அங்கன்வாடி மையங்கள் இருந்தலோ அப்பகுதியில் வேகத்தடைகளை அமைத்து விடுவர்.

ஆனால் நான்குவழிச்சாலையில் இஷ்டத்திற்கு வேகத்தடைகளை அமைக்க முடியாத நிலையில் ரோடு பிரிவுகளை கடக்கும் மக்களை, வாகனங்களை பாதுகாக்க போலீசாருக்கு கிடைத்த ஒரு ஆயுதமே பேரி கார்டுகள்.

இதனால் மாவட்டத்தில் நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் ஏராளமான இடங்களில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் இப்பகுதியில் கண்டிப்பாக குறைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடங்களில் வேகமாக வரும் டிப்பர், லாரிகளில் இருந்து கற்கள், தென்னை மட்டைகள், விறகுகள், செங்கல் என பலவித பொருட்கள் கீழே விழுந்து அப்படியே அப்புறப் படுத்தாமல் கிடப்பில் விடப்படுகின்றன.

மேடான பகுதியில் இருந்து மழை நீருடன் அரித்து வரப்படும் மண், மணல் பல இடங்களில் குவிந்துக் கிடக்கிறது.

இவற்றின் மீது டூவீலர்கள் ஏறும்போது தடுமாற்றம் ஏற்பட்டு அருகில் செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்துக்கு வாய்ப்பாக உள்ளது. டூவீலருடன் தவறி விழுந்தும் பாதிப்படையும் நிலை உள்ளது.

டூவீலர் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு அக்கறை இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. இதுபோன்ற நெடுஞ்சாலை ஆபத்துகளையும் தடுக்க நடவடிக்கை அவசியம்.

Advertisement