மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது

நமது நிருபர்




மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிலத்தை அபகரித்ததாக பதிவான வழக்கில் ஏற்கனவே கலெக்டர் பி ஏ., உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வது நபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோயிலுக்கு சேவை செய்ய புதுக்கோட்டை ராஜ்குமாரர் தட்சிணா மூர்த்தி துரைராஜா-துரை ராணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ.,அரசன், சார்பதிவாளர்கள் பிரகாஷ், அனந்தராமன், தங்கள் பெயருக்கு பட்டா மாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி ராமாயி ஆயியார், தஞ்சாவூர் மாவட்டம் சிலாத்துார் செந்தமிழ்செல்வி உட்பட 19 பேர் மீது கோயில் இணைகமிஷனர் செல்லத்துரை புகாரில் மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
புதுக்கோட்டை கறம்பக்குடி ராஜ்குமார், இளையராஜா,முன்னாள் தாசில்தார் மற்றும் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளரான அன்பழகன் கைது செய்யப்பட்டனர். தற்போது 18வது குற்றவாளியான திண்டுக்கலைச் சேர்ந்த காளி குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement