வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சத்தை கொடிநாள் நிதியாக வழங்கிய முதியவர்; எழுந்து நின்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்

29


-நமது நிருபர்-



தனது வாழ்நாள் சேமிப்பான 30 லட்சம் பணம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பு தங்க நகை ஆகியவற்றை கொடிநாள் நிதியாக வழங்க மதுரையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயில் எழுதி மதுரை கலெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.


மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர் சுப்பையா(82). மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்த நிலையில் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

உடல் தானம்



Latest Tamil News

இந்நிலையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் தனது வங்கி கணக்கில் உள்ள 30 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மற்றும் வங்கி லாக்கரில் தனது பெயரில் உள்ள 30 லட்சம் ரூபாய் மதிப்பு தங்க பொருட்கள் ஆகியவற்றிற்கான உயில் ஆவணத்தை ராணுவ வீரர்களுக்காக கொடிநாள் நிதியாக ஒப்படைத்தார். மேலும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். இவர், கடந்த 2013ம் ஆண்டு தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.

பாராட்டு



மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்ட முகாமில் சுப்பையா கொடிநாள் நிதியாக 60 லட்சம் ரூபாய் அளவுக்கு உயில் ஆவணத்தை வழங்கியதை பாராட்டும் வகையில் அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

Latest Tamil News
சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு குழந்தைகள், மனைவி என யாருமில்லை. நமது நாட்டை காப்பாற்றுவது ராணுவம் தான். அவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் அது நமக்கு மனது திருப்தி தரும். 60 லட்சம் மதிப்பிலான டெபாசிட் தொகை, லாக்கர் ஆகியவற்றை பணமாக எடுத்து ராணுவ வீரர்களுக்காக வழங்க முயன்றேன். ஆனால் வங்கிகளில் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக உயில் ஆவணமாக வழங்கியுள்ளேன். மேலும் ரூ.10 ஆயிரம் காசோலை கொடுத்துள்ளேன். சேமிப்பில் இருந்து மாத மாதம் வரும் வட்டி பணத்தையும் கொடுக்கவுள்ளேன். இது திருப்தியாக உள்ளது .

நன்றி கடன்



நான் இருந்தாலும் இறந்தாலும் திருப்தியாக உள்ளேன். ஆத்ம திருப்திக்காக கொடுத்துள்ளேன். நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய மொத்த சேமிப்பிலிருந்து கடைசி காலத்தில் 1% ராணுவத்திற்காக வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். ராணுவ வீரர்கள் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement