எஸ்.பி.ஐ., நிதிநிலை முடிவுகள் வலுவாக இருந்தும் பங்குகள் சரிந்தது ஏன்? எஸ்.பி.ஐ., பங்குகளை வாங்கலாமா?

'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வின் ஜூன் காலாண்டு நிதி முடிவுகள் வலுவாக இருந்தபோதிலும், நேற்று பங்கு விலை 2.39 சதவீதம் சரிந்து 1,071 ரூபாயாக முடிந்தது. வங்கியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக நிதிநிலை முடிவுகள் வெளியான நிலையில், பங்கு விலை மட்டும் ஏன் சரிந்தது என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுபற்றி பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்'நிறுவனர் வளர்முருகன் தெரிவித்ததாவது:

காலாண்டு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எஸ்.பி.ஐ., பங்கு உயர்ந்திருந்தது. முடிவுகள் வெளியானதும் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது.

குறிப்பாக, 1,100 ரூபாய்க்கு மேல் சென்ற பங்கு அந்த நிலையை தக்கவைக்க முடியாமல் சரிந்தது. அதிக வர்த்தக அளவுடன் ஏற்பட்ட இந்த சரிவு, குறுகிய காலத்தில் பங்கில் சோர்வு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக 1,100 ரூபாய் என்பது முக்கியமான நிலையாக உள்ளது. 14 நாள் ஆர்.எஸ்.ஐ., 70ஐ சோதித்துவிட்டு தற்போது கிட்டத்தட்ட 60க்கு பின்வாங்கியுள்ளது.

எனவே, 1,100 ரூபாய்க்கும் கீழ் பங்கு விலை நீடிக்கும் வரை குறுகிய காலத்தில் சற்று பலவீனமான போக்கு தொடர வாய்ப்புள்ளது. அதேநேரம், 1,113 ரூபாய்க்கும் மேல் ஒரு நாள் முடிவு ஏற்பட்டால் இந்த குறுகியகால பார்வை மாறக்கூடும்.
Latest Tamil News
நீண்டகால முதலீட்டாளர்களை பொறுத்தவரை, தற்போதைய சரிவு வங்கியின் அடிப்படை செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பலவீனத்தால் அல்ல என்பதே முக்கியமான அம்சமாகும்.

ஏற்கனவே பங்குகளை வைத்திருப்பவர்கள் அவசரமாக வெளியேற வேண்டிய காரணம் இந்த காலாண்டில் இல்லை. புதிதாக முதலீடு செய்ய விரும்புவோர், சரிவுகளில் 1,000 ரூபாய்க்கு அருகில் படிப்படியாக முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம்.

எனினும், கடன் மற்றும் வைப்பு வளர்ச்சிக்கு இடையிலான இடைவெளியை கண்காணிப்பது அவசியம். எஸ்.பி.ஐ.,யின் கடன் வழங்கல் 18.63 சதவீதம் வளர்ந்துள்ள நிலையில், வைப்புத்தொகை 9.73 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. எனவே, இந்த இடைவெளி தொடர்ந்து எவ்வாறு மாறுகிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.

மொத்தத்தில், எஸ்.பி.ஐ.,யின் அடிப்படை செயல்பாடுகள் வலுவாக இருந்தாலும், குறுகிய காலத்தில் பங்கு விலை ஒருங்கிணைப்பு அல்லது தளர்வை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நீண்டகால முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளையும், கடன்-வைப்பு வளர்ச்சி இடைவெளியையும் கண்காணித்து முடிவு எடுப்பது முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



- வளர்முருகன்
நிறுவனர், எக்சிஸ்


Advertisement