புள்ளிகள் உயர்வா; அல்லது திட்டமிட்ட சதியா; ஆகஸ்ட் 3 மற்றும் 4ல் நடந்தது என்ன? சி.ஏ.எஸ் ஏல வர்த்தகத்தில் செபி ஆய்வு

1

பங்குகள் மற்றும் சந்தை குறியீடுகளின் இறுதி முடிவு விலையை நியாயமாக நிர்ணயிக்க மாலை 3:15 மணி முதல் 3:30 மணி வரையிலான 15 நிமிட 'சி.ஏ.எஸ்.,' ஏல வர்த்தக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய முறையில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குறியீட்டு புள்ளிகளில் பெரிய அளவிலான வித்தியாசம் காணப்பட்டது.

ஆகஸ்ட் 3ல் மாலை 3:28 மணிக்கு 24,573 ஆக இருந்த நிப்டி, 3:30 மணிக்கு 24,774 என கடைசி இரண்டு நிமிடங்களில் 201 புள்ளிகள் உயர்ந்தது. அதேபோல ஆகஸ்ட் 4ல் 152 புள்ளிகள் அதிகரித்தது. இந்த திடீர் மாற்றங்கள் இயல்பான சந்தை நகர்வா அல்லது விலையை செயற்கையாக உயர்த்த திட்டமிட்டு நடத்தப்பட்ட வர்த்தகமா என்பதை ஆராய, பங்குச்சந்தைகளிடம் இருந்து வர்த்தக தரவுகளை பெற்று செபி ஆய்வு செய்து வருகிறது.

ஏல நேரத்தில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும்போது, பெரிய முதலீட்டாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் முறைகேடான வர்த்தகம் வாயிலாக சந்தை முடிவு விலையை மாற்ற வாய்ப்புள்ளதாக சந்தை பங்கேற்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வெறுமனே புள்ளிகள் உயர்ந்ததை மட்டும் வைத்து முறைகேடு என முடிவு செய்ய முடியாது என்றும், விலையை உயர்த்த திட்டமிட்டு ஒருங்கிணைந்து வர்த்தகம் செய்யப்பட்டிருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய செயற்கை விலையேற்றத்தை தவிர்க்க சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், ஏல விலையை தளங்களில் தெளிவாக காட்டவும் தரகு நிறுவனங்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது.

Advertisement