டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா

6


புதுடில்லி: டாடா டிரஸ்ட் சேர்மன் நோயல் டாடா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

டாடா சன்ஸ் குழும தலைவராக என்.சந்திரசேகரன்,63, பணிபுரிந்து வந்தார். பிப்ரவரி 2027 வரை இவரது பதவிக்காலம் இருந்தபோதிலும், டாடா டிரஸ்ட் சேர்மன் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரது ராஜினாமா முடிவை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 4% சரிந்தன.

இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் மற்றும் பல டாடா குழும நிறுவனங்களுக்கும் தலைவராகப் பணியாற்றுவதால், அவரது விலகல் அந்தப் பெருநிறுவனத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

2017ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந்து, குழுமத்தின் வணிகங்களை மேற்பார்வையிடுவதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார்.


யார் இவர்?




சந்திரசேகரன், மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் கணிசமாக வளர்ச்சி அடைந்தது. நாமக்கல் மாவட்டம் மோகனுாரை சேர்ந்த சந்திரசேகரன், தமிழ் மீடியம் பள்ளியில் படித்து உயர்நிலைக்கு வந்தவர்.

கோவை சி.ஐ.டி., கல்லுாரியிலும், திருச்சி ஆர்.இ.சி., கல்லுாரியிலும் படித்து பட்டம் பெற்றவர். டி.சி.எஸ்., நிறுவனத்தை முன்னிலைக்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு முக்கியமானது.



@block_Y@

சந்திர சேகரன் சொன்னது என்ன?

ராஜினாமா முடிவு குறித்து சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டு கால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய நிறுவனம். அது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய கட்டங்களில் இருக்கின்றன.

2027ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம். முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தலைமை குறித்த தெளிவும் முக்கியமானது. இந்தச் சூழ்நிலைகளில், வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதை, இன்று முன்னதாக டாடா சன்ஸ் வாரியத்திடம் தெரிவித்துள்ளேன். முறையான மாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யுமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு சந்திர சேகரன் கூறியுள்ளார்.block_Y

Advertisement