ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்

10


வாஷிங்டன்: துருக்கியில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாறி பயணித்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் துருக்கி தலைநகர் அங்காராவின் விமான நிலையத்தில், செய்தியாளர்களின் கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் பார்வையில் படும் வகையில், வழக்கமான பழைய நீல நிற 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் டிரம்ப் ஏறுவது போல் காட்டப்பட்டது.

ஆனால் அந்த விமானத்தில் ஏறிய உடன் அங்கிருந்த ஒரு விமான நிலைய உணவு வழங்கும் லாரி மூலமாக ரகசியமாக வெளியேற்றப்பட்ட டிரம்ப், 'ஏர் போர்ஸ் சி-32ஏ' என்ற சிறிய ராணுவ விமானத்தில் ரகசியமாக சென்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈரானிடமிருந்து வந்த நேரடி கொலை மிரட்டல் அச்சுறுத்தல் காரணமாகவே, இந்த நாடகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவன். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள். அவர்கள் சொல்வதை நான் செய்வேன். அங்கே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நினைக்கிறேன்.

நான் அதைப் பற்றி பெரிதாக எதுவும் கேட்கவில்லை. எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வரும். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன். உங்களுக்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் எனக்கு உள்ளன.

எந்தவொரு செல்வாக்கு மிக்க அதிபருக்கும் பல அச்சுறுத்தல்கள் இருக்கும். முக்கியத்துவம் குறைந்த அதிபர்கள் அச்சுறுத்தப்படுவதில்லை. ஒருவேளை நானே மிகவும் செல்வாக்கு மிக்க அதிபர் என்று நினைக்கிறேன்.

உண்மையைச் சொல்லப்போனால், நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அது எதுவாக இருந்தாலும் சரி, என் மனப்பான்மை உங்களுக்குத் தெரியுமல்லவா? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Advertisement