காஷ்மீரி பண்டிட்களுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

13

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன், இங்கு சிறுபான்மையினராக உள்ள காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர், டி.ஜி.பி., டில்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, லஷ்கர் - இ - தொய்பாவின் துணை அமைப்பான ஐக்கிய விடுதலை கவுன்சில் சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இதில், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீரில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை உடனே நிறுத்தவில்லை எனில், ஜம்முவில் குடிபெயர்ந்து, அரசு அதிகாரிகளாக பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் மீது தாக்குதல் தொடுப்போம். அவர்கள், ஜம்முவுக்கு இடம்பெயர்ந்தாலும், குறிவைக்கப்படுவர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆறு அரசு ஊழியர்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புப் பகுதி களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement