அலங்கோலமாக  காட்சியளிக்கும்  மானாமதுரை  அலங்கார குளம்

மானாமதுரை: மானாமதுரை - தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள அலங்கார குளம் தற்போது கழிவுநீர் தேங்கி,அசுத்தமான நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் குளத்தை முழுமையாக சீரமைத்து துாய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.

மானாமதுரை நகரின் முக்கிய ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அலங்கார குளத்தில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு குளத்தில் கரைக்கப்படுவது வழக்கம்.

மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு முளைப்பாரி விழாக் களின் போதும் முளைப்பாரிகளை அலங்கார

குளத்தில் கரைப்பது உண்டு. மானாமதுரை வீர அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழாவின் போது வீர அழகர் தீர்த்தவாரி உற்ஸவமும் அலங்கார குளத்தில் தான் நடைபெற்று வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த அலங்கார குளத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதுடன், குப்பை, கழிவு காணப்படுவதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலங்கார குளத்தை ஆய்வு செய்து, குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், குப்பை மற்றும் கழிவுகளை முழுமையாக அகற்றி துாய்மைப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement