ஆன்லைன் விளையாட்டில் பணம் ஜெயித்தாலும் சிக்கல்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வேலுார்: 'ஆன்லைன் விளையாட்டில், வெற்றி பெற்று, அதன் வாயிலாக வங்கி கணக்கில் பணம் பெற்றாலும், சிறை செல்ல நேரிடும்' என, வேலுார் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் மோசடி செய்து பறிக்கும் பணத்தை, மர்ம நபர்கள் பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புகின்றனர். இதற்காக, பொதுமக்களிடமே வங்கிக்கணக்கு விபரங்களை விலை கொடுத்து வாங்கி, மோசடிக்கு பயன்படுத்துவது தெரிந்தது.

இதனால், மர்ம நபர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக, வங்கிக் கணக்கு விபரங்களை வழங்கிய பொதுமக்களும் கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும், அந்த மோசடி கும்பலில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு, ஆன்லைன் விளையாட்டு, கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அதில் சிக்குகின்றனர். அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, கைதும் செய்யப்படுகின்றனர். எனவே, ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

Advertisement