சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயர்நீதிமன்றம் உறுதி

7

மதுரை: உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (எம்.எம்.பி.ஏ.,) வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெசிஜீவபிரியா. இவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு எழுதிய கடிதம்:

தங்களின் சுற்றறிக்கையில், 'மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'வந்தே மாதரம்' தேசிய பாடல் பாடப்படும் அல்லது இசைக்கப்படும். முதலில் 'வந்தே மாதரம்' பாடல், தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்படும். இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இடம்பெறவில்லை.

உயர்நீதிமன்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நீண்டகாலமாக நிலவி வரும் மரபின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு அல்லது பாடப்பட்ட பின்னரே துவங்குவது வழக்கமாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ், பண்பாட்டு பெருமையின் அடையாளம். சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

எம்.எம்.பி.ஏ., தலைவர் அருள்வடிவேல் (எ)சேகர் கூறியதாவது: அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை சந்தித்தோம். கோரிக்கையை வலியுறுத்தினோம். விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என அவர் உறுதியளித்தார்.

முதல்வர் கொடியேற்றும் நிகழ்வின்போது மாநில அரசு பின்பற்றும் நடைமுறையை உறுதிப்படுத்துமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். அதே நடைமுறை உயர்நீதிமன்றத்திலும் பின்பற்றப்படும் என நிர்வாக நீதிபதி உறுதியளித்தார். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement