காலை உணவு திட்ட டெண்டர் ரத்து கடையநல்லுார் நகராட்சி நடவடிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள காலை உணவு திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. கடையநல்லுார் நகராட்சி பகுதியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 2183 மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டத்திற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.

இதற்கான இணையவழி டெண்டர் ஜூலை 27ல் வெளியிடப்பட்டு, ஆக.14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார் வெளியானது. இதையடுத்து டெண்டரை ரத்து செய்து நகராட்சி ஆணையாளர் சோனியா உத்தரவிட்டார்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், ''அனைத்து டெண்டர்களிலும் வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே நகராட்சியின் நோக்கம். விதிகளுக்கு உட்பட்டு தகுதியான அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்துகொள்ளும் வகையில் புதிய டெண்டர் கோரப் படும், என்றார்.

Advertisement