சமுதாய கூடம், பூங்கா அமைக்க கோரிக்கை

சூலுார்: ‘அரசூர் ஊராட்சியில் ஏழை மக்கள் பயன்படுத்த சமுதாய கூடமும், குழந்தைகள் விளையாடவும் பொழுது போக்கவும் பூங்காக்கள் அமைக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் பவன்குமார் பங்கேற்று மனுக்களை பெற்றார். அவரிடம் உலக பசுமை புரட்சி அமைப்பை சேர்ந்த ரமேஷ்குமார் அளித்த மனு:

அரசூர் ஊராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடந்த சமுதாய கூடம் தேவைப்படுகிறது. சமத்துவபுரத்தில் இருந்த சமுதாயக்கூடம், நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொடுக்கப்பட்டதால், ஏழை மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதனால், புது சமுதாய கூடம் கட்டவேண்டும் அல்லது மேற்கு அரசூரில் உள்ள பழைய சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும், 2020-–21ம் ஆண்டு ஊராட்சியில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை கள ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை துார் வாரி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement