பழங்குடியினருக்கான வீடுகளில் கழிப்பறையே கட்டப்படவில்லை

அச்சிறுபாக்கம்: கீழாமூர் ஊராட்சியில் கட்டி முடித்து ஓராண்டாகியும், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தாததால், தொகுப்பு வீடுகள் பழங்குடியின மக்களுக்கு ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழாமூர் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், வீடு இல்லாமல் தவித்து வந்தனர்.

இதனால், தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த 2024- --25ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை சார்பில், 10 குடும்பங்களுக்கு தலா 5.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.

கட்டி முடித்து ஓராண்டு ஆகியும், தொகுப்பு வீடுகளில் தற்போது வரை கதவு, ஜன்னல் அமைக்கப் படவில்லை. மேலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தாததால் தொகுப்பு வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன .

இதுகுறித்து, பழங்குடியின மக்கள் கூறியதாவது:

தனியார் ஒப்பந்ததாரர்கள் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தனர். வீடுகள் கதவு, ஜன்னல் இன்றி கட்டப்பட்டுள்ளன; குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் இல்லை. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை குழாயில் தண் ணீர் வினியோகிக்கப்படுகிறது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தொகுப்பு வீடுகளுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement