தோட்டக்கலை பயன்பாடு: மின் இணைப்பு வழங்க 50 சென்ட் நிலம் கட்டாயமல்ல

சென்னை: தமிழகத்தில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கை அடிப்படையில், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, விவசாய மின் இணைப்பு பெற, 50 சென்ட் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

தற்போது, '50 சென்ட் குறைவாக நிலம் வைத்துள்ளவர்களுக்கு, மலர் சாகுபடி, தோட்டக்கலை பயன்பாட்டிற்கான கட்டண பிரிவில் இணைப்பு வழங்கப்படுமா' என, பலர் கேட்டு வருகின்றனர்.

எனவே, 'மலர் செடிகள் வளர்ப்பு, தோட்டக்கலை பயன்பாட்டிற்கு மட்டும், '3ஏ' பிரிவு மின் கட்டண விகிதத்தில் இணைப்பு வழங்கும்போது, 50 சென்ட் நிலம் இருப்பது கட்டாயமாக கருத வேண்டியதில்லை' என, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பிரிவில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் யூனிட்டிற்கு, 4.95 ரூபாயும், அதற்கு மேல், 7.15 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement