(டிட் பிட்ஸ்-–1) அளவுக்கு அதிகமாக காரமான உணவுகள் சாப்பிட்டால் ...

தினமும் அதிகமாக காரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி, செரிமானப் பிரச்சனைகள் உள்ளிட்ட பாதிப்புகள் மற்றும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.இந்திய உணவு வகைகளில் மிளகாய், மிளகாய் தூள் மற்றும் பிற காரமான மசாலா பொருட்களுக்கு என்றும் தனி இடம் உள்ளது. பலரும் காரம் இல்லாத உணவை சாப்பிட விரும்புவதும் இல்லை. மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் வேதிப்பொருள் சில நன்மைகளை தந்தாலும், தினமும் அதிக அளவில் காரம் உட்கொள்வது சிலருக்கு செரிமானப் பாதையில் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே அசிடிட்டி, அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, கார உணவுகள் அறிகுறிகளைத் தூண்டக்கூடும். இருப்பினும், கார உணவுகளின் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடும்.

வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் சூடு மற்றும் எரிச்சலை உணரச் செய்யும் நரம்புகளைத் தூண்டுகிறது. இதனால் சிலருக்கு நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான அசவுகரியம் ஏற்படலாம். காரமான உணவுகள் நேரடியாக வயிற்றுப்புண்களை உருவாக்கும் என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஏற்கனவே இரைப்பைஉணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கார உணவுகள் அறிகுறிகளை தூண்டலாம் அல்லது அதிகரிக்கலாம்.

செரிமானப் பாதை பிரச்சனைகள் அதிகளவில் காரமான உணவுகளை உட்கொள்வது வயிற்று வலி, திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக, குடல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அறிகுறிகளைத் தூண்டக்கூடும். எனவே, கார உணவுகளை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட்டால், காரத்தின் அளவைக் குறைப்பது உதவியாக இருக்கலாம்.

வாய், நாக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் கார உணவுகளில் உள்ள கேப்சைசின், வலி மற்றும் சூட்டை உணரும் நரம்புகளைத் தூண்டுவதால் வாய், நாக்கு மற்றும் தொண்டையில் கடுமையான எரிச்சல் உணர்வு ஏற்படும். உணவில் கேப்சைசின் அளவு அதிகமாகும்போது, இந்த உணர்வும் தீவிரமாக இருக்கலாம். இந்த உணர்வு பொதுவாக தற்காலிகமானதாக இருந்தாலும், அதிக காரத்தை தொடர்ந்து உட்கொள்வது சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம்.



உணவில் எவ்வளவு காரம் இருக்க வேண்டும் காரத்தை தாங்கும் திறன் நபர் நபருக்கு மாறுபடுவதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட அளவு காரம் என்று தனியாக நிர்ணயிக்க முடியாது.உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தொடர்ந்து ஏற்பட்டால், அந்த உணவில் காரத்தின் அளவைக் குறைப்பது நல்லது. எந்த அளவு காரம் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனிப்பட்ட முறையில் கவனிப்பதும் முக்கியம்.

கார உணவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு டிப்ஸ் மிளகாய்த்தூளின் அளவை குறைத்து, சீரகம், தனியா, மஞ்சள் போன்ற பிற மசாலாப் பொருட்களை சுவைக்காக பயன்படுத்தலாம்.தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும்.போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்.கார உணவுகளை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து அசவுகரியம் ஏற்பட்டால், காரத்தின் அளவை குறைத்து அறிகுறிகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கவனிக்கலாம்.காரத்தை குறைத்த பிறகும் தொடர்ச்சியான நெஞ்செரிச்சல், மலத்தில் ரத்தம், கடுமையான வயிற்று வலி அல்லது காரணமின்றி தொடர்ந்து எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

Advertisement