காவிரி பாலம் அருகே மருத்துவ கழிவு கொட்டியுள்ளதால் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம்:குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரை சாலையோரம், பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில்களை பாதுகாப்பின்றி கொட்டிச் சென்றுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம், காவேரி நகரில் குமாரபாளையத்தையும், ஈரோடு மாவட்டம், பவானி பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் மீது, ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, 2011ல் புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது.
தினசரி, லட்சக்கணக்கானோர் இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த பாலத்திற்கு செல்லும் பாதையில் சாலை ஓரம் உள்ள முட்புதர் பகுதியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட காலி மருந்து பாட்டில்கள், சிரஞ்சு ஊசி ஆகியவற்றை பாதுகாப்பின்றி கொட்டி சென்றுள்ளனர். இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், கால்நடைகளும் மேய்ச்சலின்போது மருந்து பாட்டில்களை, ஊசிகளை சாப்பிடக்கூடும். எனவே, அந்த மருந்து பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement