பைக் மீது ஜே.சி.பி., மோதி விபத்து மருத்துவக்கல்லுாரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே ஜே.சி.பி., வாகனம் மோதி பைக்கில் சென்ற மருத்துவக் கல்லுாரி மாணவர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் அருண் பாலாஜி, 23; விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர், நேற்று மதியம் ஹீரோ பைக்கில் முண்டியம்பாக்கத்திலிருந்து, கள்ளக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றார்.

மாலை 5:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு புறவழிச்சாலையில் சென்ற போது, ஜே.சி.பி., அருண் பாலாஜி ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement