பலா பழத்தை ருசிக்க ஒற்றை காட்டு யானை

வால்பாறை: வால்பாறையில், பலா பழத்தை ருசிக்க வந்த ஒற்றை யானையை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக லோயர்பாரளை, பாறைமேடு, உபாசி, சின்கோனா, பெரியகல்லார், ஆனைமலை கிளப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், சின்கோனா (டான்டீ) இரண்டாம் பிரிவு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த ஒற்றை யானை, பலா பழத்தை ருசித்து உட்கொண்டது. சப்தம் கேட்டு வெளியில் வந்த தொழிலாளர்கள் யானையை விரட்ட துவங்கினர்.

ஆனால், பலா பழத்தை யானை ருசித்து உட்கொள்வதிலேயே மும்முரமாக இருந்தது. அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதிக சப்தம் எழுப்பியும், டார்ச்லைட் அடித்தும் யானையை வனப்பகுதிக்குள்  விரட்டினர்.

Advertisement