இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்

21



-நமது நிருபர்-




பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர், அரசியல் சூழல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது, அந்நாட்டு நிலவரத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதாக உள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது: இன்று நம் நாட்டின் நிலைமையைப் பாருங்கள். நாமும் இந்தியாவும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றோம், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, பலூசிஸ்தான் நம் கையை விட்டு நழுவிவிட்டது, கைபர் பக்துன்க்வாவில் மக்கள் கலக்கமடைந்துள்ளனர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரங்கில் தனது நிலையை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; இன்று, நாம் உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாடா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களை (இந்தியாவை) குறை கூறுவதற்குப் பதிலாக, பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த அரசையும், கொள்கைகளையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்; பாகிஸ்தானை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார், நாம் எப்படி இங்கு வந்தோம் என்று கேட்க வேண்டும். இவ்வாறு கவாஜா ஆசிப் கூறினார்.


கவிழ்ந்துவிடும்




அதேபோல் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி கூறியதாவது: என் பாகிஸ்தானிய சகோதர சகோதரிகளே, யதார்த்தத்தை நாம் இனியும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அரசு இதே வழியில் தொடர்ந்து செயல்பட்டால், அதன் பதவிக்காலம் முடிவதற்குள் அது கவிழ்ந்துவிடும் என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.

நான்கு மாகாணங்களிலும் பிரச்னைகளை நிலவுகிறது; மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசு மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் அமைதியின்மை நிலவுகிறது.
காஷ்மீரில் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் போராடி வருகின்றனர். பணவீக்கம் மற்றும் வேலையின்மை நாடு முழுவதையும் பாதித்துள்ளது.

நாட்டின் முடிவுகளை அரசு எடுக்கிறதா அல்லது ராணுவம் எடுக்கிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? சுயமாக முடிவெடுக்க முடியாத ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எவ்வளவு காலம் நீடிக்கும்; ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் சுயமாக முடிவெடுக்க முடியாத போது, ​​அது இறுதியில் எவ்வளவு காலம் நீடிக்கும்? இவ்வாறு மோஷின் நக்வி கூறினார்.

Advertisement