மா.கம்யூ., மாவட்ட நிர்வாகிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

1

சென்னை: 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மீதான தாக்குதலில், சம்பந்தப்பட்ட முன்னாள் ஊராட்சி தலைவரின் மகன்கள் இருவர் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, அக்கட்சியின் தமிழக செயலர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:




உளுந்துார்பேட்டையின், கடந்த 21ம் தேதி இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போராட்டத்திற்கான தயாரிப்பு பணிகளை முடித்து விட்டு, கிள்ளியூர் கிராமம் அருகில் காரை நிறுத்தியிருந்தனர்.

அப்போது, வட மாம்பாக்கத்தை சேர்ந்த 8 பேர், கட்சியின் பெயரை அசிங்கமாக திட்டி, காரிலிருந்து கட்சி கொடிகளை முறித்து, கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். கட்சி நிர்வாகிகளையும் கொலை வெறியோடு தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மாவட்டச் செயலர் ஜெய்சங்கர், முன்னாள் மாவட்ட செயலர் ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் மோகன் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 22 வீடுகளை கட்டாமல் அவரே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டோரை திரட்டி, கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. மேலும் அப்பகுதி மக்களுக்காக, கட்சியினர் போராடி வருகின்றனர்.

இதை மனதில் வைத்து தான், முன்னாள் ஊராட்சி தலைவரின் மகன்கள் இருவர் உட்பட, 8 பேர் கொண்ட கும்பல், திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறி தாக்குலில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக, களமருதுார் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். தாக்குதலில் சம்பந்தப்பட்ட, முன்னாள் ஊராட்சி தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைவரையும், போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement