கிரைம் கார்னர்: கோவை
கஞ்சா பறிமுதல்;இருவர் கைது
சிங்காநல்லுார்: இருகூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முனா சிங், 26 என்பதும், இருகூரில் தங்கி ஸ்பின்னிங் மில்லில் தொழிலாளியாகவும், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் குமார் , 26 கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இருவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இருகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து, 1கிலோ 400 கிராம் கஞ்சா, 590 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது.
சரித்திர பதிவேடுகுற்றவாளிகள் கைது
சிங்காநல்லுார்: நீலிக்கோணம்பாளையம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக செல்வபுரம் சரவணன், 29 மற்றும் மசக்காளிபாளையம் பிரிதிவிராஜ், 25 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிறுவர்களையும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சாட்சிக்கு மிரட்டல்
கணபதி: கணபதியை சேர்ந்த பாண்டி, நல்லாம்பாளையம் ரோட்டில் மளிகைக்கடை வைத்துள்ளார். கடையில் இருந்தபோது, உப்பிலிபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் தன் மீதுள்ள வழக்கிற்காக வக்கீலுக்கு கட்டணம் செலுத்த பணம் கேட்டு மிரட்டினார். பணம் தரமறுத்ததால், வழக்கில் சாட்சி கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி சென்றார். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
கொள்ளை முயற்சி
பீளமேடு: கருப்பராயன்பாளையத்தில் அதிகாலையில் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைய முயன்றனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு விளக்கை போட்டதும் தப்பி ஓடினர். வீட்டின் உரிமையாளர் தர்மபிரபு, 42 போலீசில் தெரிவித்துள்ளார். சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடுபுகுந்து திருட்டு
சரவணம்பட்டி: இளங்கோ நகர் சுப்ரமணி, 38 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றுள்ளார். மதிய நேரம், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், இரண்டு மொபைல் திருடுபோனது. இதன் மதிப்பு, 10.26 லட்சம் ரூபாய். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆர்.எஸ்.புரம்: பி.என்.புதுார் பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அன்னபூரணி, 56 என்பவரை ரோந்து சென்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.
தவறவிட்ட தங்கசெயின்மீட்பு
கோவை: வைசியாள் வீதி தனியார் நகை கடை உரிமையாளர் ரிசாம், தனது கடை முன் காரில் ஏறியபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 3 சவரன் தங்கச்செயினை தவறவிட்டு சென்றார். அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடை வீதி போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளின் படி, கீழே இருந்த நகையை எடுத்து சென்றவர் வீட்டிற்கு சென்று நகையை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
* பல்லடத்தை சேர்ந்த அம்மாசையப்பன், 60 தனது மனைவியின் 10.5 சவரன் தாலி செயினை, பெரியகடைவீதியில் உள்ள நகைகடையில் பணிபுரியும் மதன்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை எடுத்துச்செல்லும் வழியில், மதன்குமார் நகையை தவறவிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடை வீதி போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கண்காணித்து செயினை எடுத்துச்சென்றவரின் வீட்டிற்கு சென்று, நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கஞ்சா சாக்லெட் பறிமுதல்
சிங்காநல்லுார்: சிங்காநல்லுார் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் பவன் குமார், 24 என்பவரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 500 கிராம் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் நெட்வொர்க் குறித்து விசாரிக்கின்றனர்.
ரூ.10 லட்சம் ஏ.டி.எம். பணம் மோசடி
குனியமுத்துார்: பி.கே.புதுாரை சேர்ந்தவர் ராஜ்குமார், 61. தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்கிறார். பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அலுவலகம் உள்ளது. இங்கு திருச்சி, அம்பிகாபுரத்தை சேர்ந்த கதிர்வேல் பிச்சைமுத்து, 2 ஆண்டுகளாக பணிபுரிந்தார். கடந்த 30ம் தேதி, ராஜ்குமார், ரூ.10.2 லட்சத்தை ஏ.டி.எம்., களில் நிரப்ப கதிர்வேல் பிச்சைமுத்துவிடம் கொடுத்தார்.
பணம் நிரப்பியதற்கான ரசீதை, ராஜ்குமாருக்கு அனுப்பினர். ஆனால், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பாதது ராஜ்குமாருக்கு தெரிந்தது. கதிர்வேல் பிச்சைமுத்துவிடம் கேட்டபோது, குடும்பத்தின் அவசர தேவைக்காக பணத்தை தன் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டதாகவும், சில நாட்களில் திரும்ப தருவதாகவும் கூறினார். அதன்பின், கதிர்வேல் பிச்சைமுத்துவை தொடர்புகொள்ள முடியவில்லை. புகாரில் குனியமுத்தூர் போலீசார் கதிர்வேல் பிச்சைமுத்து மனைவி ஐஸ்வர்யாவை கைது செய்தனர். தலைமறைவான கதிர்வேல் பிச்சைமுத்துவை தேடுகின்றனர்.
வீடு கதவு உடைத்து திருட்டு
பீளமேடு: நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன். நீலகிரி அரசு மருத்துவமனையில் நர்சிங்பணியில் உள்ளார். இவரது மகன், கடந்த 21ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் உறங்கச்சென்றுவிட்டு, 22ம் தேதி காலை, பள்ளிக்கு செல்ல தயாராக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை பார்த்து, தந்தை மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த,24 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி நகைகள், 1000 ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பால் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம், பரந்துார் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
-
பணக்கார நுகர்வோர் எண்ணிக்கை; 2036க்குள் சீனாவை இந்தியா முந்தும்!
-
அதானியுடன் கர்நாடகா முதல்வர் சிவகுமார் சந்திப்பு; ராகுலிடம் அனுமதி பெற்றாரா? என பாஜ விமர்சனம்
-
அதிக மழைப்பொழிவு எங்கே!