நிலமோசடி வழக்கில் எஸ்.பி., ‘பிரஸ்மீட்’க்கு  முன்னதாக தகவலை கசிய விட்ட போலீசார்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.4 கோடி நில மோசடி வழக்கில் அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு தகவல் படங்களுடன் செய்தி வெளியானது எப்படி என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சந்தீஷ்  தெரிவித்தார். 

ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தை சேர்ந்த பகுருதீன்  மனைவி ஹாஜாபானு மலேசியாவில் வசிக்கிறார். இவருக்கு சக்கரகோட்டையில் 80 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை  ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாபர் அலி 38, போலி ஆவணம் மூலம் பவர்பத்திரம் தயார் செய்து அதை பயன்படுத்தி  விற்பனை செய்து  மோசடியில் ஈடுபட்டார். 

ஹாஜாபானு புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜாபர் அலி, அவரது கூட்டாளிகள் ராமேஸ்வரம் பேக்கரும்பை சேர்ந்த சகோதரர்களான சந்திரகுமார் 47, செந்தில்குமார் 49,  கீழக்கரை  அருகே காடுகாவல்காரன் வலசை மகேஸ்வரன் 44, ஆகியோரை கைது செய்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

நில மோசடிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  4 பேர் கைது  தொடர்பான  விபரங்களை நேற்று (ஆக.24ல்) பிரஸ்மீட் மூலம் எஸ்.பி., தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.  ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலட்சியத்தால் அதற்கு முன்னதாக நேற்று முன்தினமே  தகவல் வெளியாகி விட்டது. 

 இதற்கு காரணமான அந்த கருப்பு ஆடு (போலீஸ்) யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி., சந்தீஷ்  தெரிவித்தார். ––

Advertisement