மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை

11

கோவை: மின் கணக்கீடு செய்யாத மாதங்களில், முந்தைய தொகையை செலுத்தச் சொல்லும் நடைமுறையை, மின் அமைச்சர் தவறாக புரிந்துகொண்டு, மின் கணக்கீட்டாளர்கள் 'டேபிள் ஒர்க்' செய்ததாக பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சருக்கு தவறான தகவல் தெரிவித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் 3.20 கோடி இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு தொடர்ந்து வழங்குவதால், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 7,591 கணக்கீட்டாளர் பணியிடம் உள்ளது; 1,500 நபர்களே பணிபுரிகின்றனர். 6,000 பணியிடம் காலியாக இருப்பதால் ஆய்வாளர்களும் கணக்கீடு செய்கின்றனர்.

சில நேரங்களில், நிர்வாக காரணங்களால் கணக்கீடு செய்யாவிட்டால், முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையை கட்டச் சொல்லி மின்வாரியம் அறிவிக்கும். அடுத்தடுத்த மாதங்களில் அளவீடு செய்து, மின் கணக்கீடு சரி செய்யப்படும். சமீபத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்ததாக எழுந்த புகாரால், ஜூலையில் மீண்டும் ஆய்வு செய்ததில், 0.6 சதவீதம் மட்டுமே குறை இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால், கடந்த காலங்களில் கணக்கீட்டாளர்கள் பணிக்குச் செல்லாமல் உத்தேசமாக 'டேபிள் ரீடிங்' செய்ததாகவும், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின் கணக்கீடு சரியாக நடப்பதாகவும், பல மாதமாக கணக்கெடுக்காமல் இருந்து விட்டு, இப்போது செய்ததால் கட்டணம் உயர்ந்ததாக, சட்டசபையில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். இதற்கு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.

சம்மேளனத்தைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில் 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும். முடியாத சூழலில், முந்தைய தொகையை செலுத்த அறிவிப்பு வெளியிடப்படும். இதை பி.எம்.சி. (previous month calculation) என கூறுவோம். இதுவே மின்வாரிய நடைமுறை.

'டேபிள் ரீடிங்' என்றால் கணக்கீடுக்கு செல்லாமல் அவரே தோராயமாக மின் கணக்கீடை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்வதாகும். 'டேபிள் ரீடிங்' என்பது தவறான விஷயம்.

பி.எம்.சி., என்பதற்கும், 'டேபிள் ரீடிங்' என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் உயரதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை மின் அமைச்சர், சட்டசபையில் பேசியது கணக்கீட்டாளர்களை மனதளவில் பாதித்துள்ளது.

கணக்கீட்டாளர் பற்றாக்குறையால், பல இடங்களில் பி.எம்.சி., முறையில் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் போடப்பட்ட மின் கணக்கையே, வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் போடப்பட்டது. குளிர்காலத்தில் மின் உபயோகம் குறைவாக இருக்கும். கோடையில் மின்விசிறி, ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் கட்டணம் உயர்வது வாடிக்கை. அதன்பின் ரீடிங் எடுக்கும்போது, யூனிட் வித்தியாசத்தை சேர்த்தால், ஒவ்வொருவருக்கும் அதிகமாக மின் கட்டணம் வரும்.

முந்தைய மாதங்களில் கணக்கீடு செய்தாததே காரணம் என சொல்வதற்கு பதிலாக, கணக்கீட்டாளர்கள் டேபிள் ஒர்க் செய்ததாக உயரதிகாரிகள் கூறியதை நம்பி, பேசி விட்டார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் அமைச்சர் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

Advertisement