பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து? ரிஸ்வான் அர்ஷத் விளக்கம்

பெங்களூரு: ''மாநிலத்தில் தற்போதைக்கு, எந்த ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படாது. பயனாளிகள் பயப்பட தேவையில்லை,'' என உணவுத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.

சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் நாராயணசாமி கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:

சமீப நாட்களாக, பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால், அது உண்மையல்ல. பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் உட்பட மத்திய, மாநில அரசுகளின் எந்த ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படாது. பயனாளிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பரிசீலனை செய்யப்பட்ட பி.பி.எல்., ரேஷன்கார்டுகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள கார்டுகள் பரிசீலிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் உத்தரவுப்படி, பரிசீலனையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன் தகுதியற்றவர்கள் பெற்றிருந்த 4 லட்சம் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும், இப்போது நடக்கும் பரிசீலனைக்கும் வித்தியாசம் உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement