பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்

18



-நமது நிருபர்-




பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவி தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரயாக்ராஜில் உள்ள ஒரு பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்தர்ஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவி தரப்பில் வாதிடுகையில், ''10ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் தான் படித்தேன். அப்பொழுது எல்லாம் ஹிஜாப் அணிவதற்குப் பள்ளி நிர்வாகம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து ஹிஜாப் அணிய விரும்பியதால், 11ம் வகுப்பில் சேருவதில் தனக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது தனது மதத்தின் இன்றியமையாத மத நடைமுறையாகும். எனது மத சுதந்திர உரிமையின் கீழ் அதைத் தொடர்ந்து அணிய நான் அனுமதிக்கப்பட வேண்டும்.'' என்றார்.


நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

* ஹிஜாப் அணியாததால் மத நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படாது. இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு ஹிஜாப் அத்தியாவசியமானது கிடையாது.

* அரசியலமைப்பின் 25வது பிரிவைச் சார்ந்து முன்வைக்கப்படும் ஒரு கோரிக்கையை, அதற்கான அவசியமான உண்மை மற்றும் சட்ட அடிப்படைகள் இல்லாமல், வெறும் கூற்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது

* பள்ளியின் உடைக் கொள்கை சீரானது மற்றும் பாகுபாடற்றது. மாணவர்கள் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மாற்றங்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையைடுத்து மாணவியின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பள்ளி தனது பரிந்துரைக்கப்பட்ட சீருடைக் கொள்கையை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.


ஹிஜாப் அணிவது மத சுதந்திர உரிமையின் அடிப்படையில் இன்றியமையாத நடைமுறை என்று, மாணவி முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் நீதிபதிகள் கூறியதாவது:

மாணவியின் கோரிக்கை தொடர்பாக, பல்வேறு வகுப்பறைகளின் புகைப்படங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அவரைத் தவிர, அவரது மதத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவியும் ஹிஜாப் அணியவில்லை. அவர்கள் சீருடை மட்டுமே அணிந்திருந்தனர்.

பள்ளியின் சீருடை விதிமுறைகள் நியாயமானதாகவும், பாகுபாடற்றதாகவும், ஒழுக்கம் மற்றும் சமத்துவத்தைப் பேணும் வகையில் இருக்கும் வரை, ஆடை தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில் முழு அதிகாரத்தையும் பள்ளி நிர்வாகம் கொண்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனத்துக்கு தனது வளாகத்திற்குள் சீருடை விதிமுறையை அமல்படுத்த முழு உரிமை உண்டு; பள்ளிச் சீருடையைக் கடைப்பிடிப்பது கட்டாயமானது. ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோருவதற்கு எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை.

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றோ, அதை அணியாவிட்டால் ஒருவரின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்றோ, போதுமான மதரீதியான அல்லது சட்டரீதியான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement