ஓராண்டில் இல்லாத சரிவில் ஹெச்டிஎப்சி வங்கி பங்கு

'ஹெ ச்.டி.எப்.சி., வங்கி'க்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அதன் பங்கு விலை புதிய 52 வார சரிவை தொட்டு உள்ளது.

நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஹெச்.டி.எப்.சி., வங்கிக்கும், அதன் இரு உயர் அதிகாரிகளுக்கும் எதிராக ஒரு முதலீட்டாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அமெரிக்க பங்கு சந்தை விதிகளை மீறியதாகவும், தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் ஹெச்.டி.எப்.சி., வங்கி மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, மஹாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு நிறுவனத்துக்கு பிற டிபாசிட்தாரர்களை விட கூடுதல் வட்டி வழங்குவதற்காக, அந்த தொகையை விளம்பர செலவு என கணக்கு காட்டியதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பற்றிய செய்தி வெளியானதால், ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்கு விலை தொடர்ந்து இரு நாட்களாக சரிந்து வருகிறது. நேற்று வர்த்தகத்தில் அதன் விலை 707 ரூபாய் என்ற புதிய 52 வார சரிவை தொட்டுள்ளது. எனினும் வர்த்தகம் நிறைவில் 1.31 சதவீதம் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

இதுபற்றி ஹெச்.டி.எப்.சி., வங்கியின் செய்தித்தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில்:

அமெரிக்காவில் இதுபோல பங்குதாரர்கள் வழக்கு தொடருவது மிகவும் வழக்கமான ஒன்றுதான். அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல வழக்குகளை எதிர்கொள்கின்றன. ஹெச்.டி.எப்.சி., மீதான குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்த வழக்கை சட்டப்படி தீவிரமாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டில் ஆக., 28 வரை ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்கு விலை 27.33 சதவீதம் சரிந்துள்ளது.

Advertisement