ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்:கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, 10,000 கன அடியாக அதிகரித்தது.

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு நீர்வரத்தை பொறுத்து, தமிழக காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு , 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, 10,000 கன அடியாக நேற்று மாலை, 5:00 மணிக்கு அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதேசமயம் ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க, 15வது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்றும் தடையை நீடித்தது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்று வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மெயினருவி மற்றும் காவிரி கரையோரத்தில் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement