குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'

சென்னை: குறைந்த விலைக்கு மொபைல் போன் விற்பதாக, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி, பார்டர் தோட்டம், எல்லீஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன், 32; தனியார் நிறுவன ஊழியர்.

கடந்த மே 25ம் தேதி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 28,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், 22,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த மொபைல் போனை வாங்க, அதில் தெரிவிக்கப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 22,000 ரூபாய் செலுத்தி முகவரியும் அனுப்பி உள்ளார்.

ஒரு வாரத்திற்கு மேலாகியும் மொபைல் போன் வராததால், அது போலி விளம்பரம் என்பது தெரிந்தது.

செல்வநாதன் புகாரையடுத்து, திருவல்லிக்கேணி போலீசாரின் விசாரணையில், மொபைல் போன் உதிரிபாகங்கள் 'சப்ளை' செய்து வரும், குரோம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 35, மற்றும் மாடம்பாக்கத்தில் 'லேப்டாப் சர்வீஸ்' கடை நடத்தி வரும் கோகுலகிருஷ்ணன், 32, ஆகியோர் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதே பாணியில், இவர்கள் பலரை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement