இமயமலையைப் பாதுகாக்க 5 நாடுகள் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும்; சத்குரு வலியுறுத்தல்

22

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர்களில் இருந்து இமயமலையைப் பாதுகாக்க இந்தியா, நேபாளம் உள்ளிட்ட 5 நாடுகள் அடங்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரையில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமானவர்களில் ஈஷா சார்பில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், தற்போது நேபாளத்திற்கு சென்றுள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, வெள்ளத்தில் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்திற்கு உதவும் விதமாக, நேபாளப் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது: மலைகளுக்கு அரசியல் சார்போ அல்லது மொழிகளோ தெரியாது. இமயமலை என்பது பூமியின் மிக அற்புதமான ஒரு பகுதியாகும். அரசியல் எல்லைகளைக் கடந்து இமயமலைப் பகுதியைப் பாதுகாக்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து ஒரு வாரியத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்காக இமயமலைப் பாதுகாக்கப்பட வேண்டும். இது நேபாளத்தின் பிரச்னை, அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கினால் எப்போதுமே தீர்வு கிடைக்காது.

இந்தத் துயரமானது, இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு மட்டும் தான். உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கால பைரவ கர்மா சடங்கு நடத்தப்படும் என்று கூறினார்.

Advertisement