'வீட்டைபோல் வெளியிடத்தையும் சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்': குப்பை கழிவுகளை அகற்ற மூதாட்டி அழைப்பு

குன்னுார்: 'பொது இடங்களை, நமது வீட்டை போல சுத்தமாக வைத்திருங்கள்,' என, குப்பை கழிவுகளை அகற்றி வரும், 82 வயது மூதாட்டி அறிவுறுத்தினார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மூதாட்டி கரோலின்,82, என்பவர் தனது கணவர் கிருஷ்ணமூர்த்தி கோபாலுடன் கடந்த, 2008 முதல் 2016 வரை, 8 ஆண்டுகள் குன்னுாரில் வசித்துள்ளார். அதன்பின், ஆண்டுதோறும், 3 மாதங்கள் இங்கு தங்குகிறார்.

மருத்துவமனை மற்றும் தொழிற்சங்க நிர்வாக செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், தற்போது குன்னுாரில் உள்ளார்.

நாள்தோறும், சி.எம்.எஸ்., லேம்ஸ்ராக் சாலையில் நடைப்பயிற்சி மேற் கொள்ளும் போது, சாலையோரங்களில் சிதறி கிடக்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று, துாய்மை பணியாளர் களிடம் ஒப்படைக்கிறார்.

கரோலின் கூறுகையில்,''இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை எப்போதும் மிக துாய்மையாகவும் நேர்த்தியாகவும் வைக்கின்றனர்; ஆனால் வீட்டை விட்டு வெளியே வரும்போது சாலைகளிலும் பொது இடங்களிலும் குப்பை போடுவதை இயல்பாக எடுத்து கொள்கின்றனர்.

பொது இடங்களையும் நம் வீடாக கருதி சுத்தமாக வைக்க வேண்டும். நாம் அலட்சியமாக வீசும் பிளாஸ்டிக் பைகள், உணவு பொட்டலங்களை கால்நடைகள், வனவிலங்குகள் உணவோடு சேர்த்து உட்கொள்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள் அவற்றின் செரிமானத்தை பாதித்து உயிரை பறிக்கிறது.

இயற்கையை பாதுகாப்பதும், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை,'' என்றார்.

Advertisement