தாலுகா மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை    

புவனகிரி: அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 புவனகிரி தாலுகா, தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.

அப்பகுதியினர் உயர் சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்கு கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவலம் நீடித்தது.

இது குறித்து அப்பகுதியினர் கோரிக்கை பேரில், மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில், மருத்துவமனை விரிவாக்கம் செய்ய சுகாதாரத்தறை சார்பில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பினர்.

சுகாதாரத் துறையில், ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் அமைக்கவும் திட்டமிட்டனர்.

மேலும், தரை தளத்தில் வாகனம் நிறுத்தும் இடம், புற நோயாளிகள பதிவிடம், சித்தமருத்துவ பிரிவு, முதல் தளத்தில் மருந்தகம், ஐ.சி.டி.சி., பிரிவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே, பெண்கள், குழந்தைகள், ஆண்கள், பல் மற்றும் சிறப்பு புற நோயாளிகள் பிரிவு, மருத்துவர் அறை, சோதனையகம், ஆய்வு மையம், ஆண்கள், பெண்கள் மற்றும்  மாற்றுதிறனாளிகள் கழிப்பிடம் இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு பகுதி மற்றும் ஆழ்துளை கிணறு, லிப்ட் வசதியுடன் புதிதாக கட்டுவதற்கு திட்டமிட்டனர்.

கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில், பூமி பூஜை  கடந்த 2024 ம் ஆண்டு பிப்., மாதம் நடந்தது.

மொத்தம், 18 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், இதுவரை முடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.  பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

Advertisement