அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை

2

டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதுடன், தன் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் கருவிகள், கடல்சார் தளங்கள், கடலுக்கு அடியில் கன்னி வெடிகள் வைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் ஆகிய 60-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசி தாக்கின. அதே நேரத்தில், 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெயுடன் சென்ற, 40 வணிக கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த, அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்தன.

இந்நிலையில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் கூறியதாவது: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும். வரும் நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தக்கூடும். ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட பகுதியை தடைசெய்யப்பட்ட மண்டலமாக ஈரான் வரும் நாட்களில் அறிவிக்கும்.

எங்களது அனுமதி இல்லாமல் இந்தத் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் மற்றும் கடக்க முயலும் எந்தவொரு வணிகக் கப்பல்களும் ஈரானின் பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கப்படும்; பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு ஈரானின் கைகளிலேயே உள்ளது; மீண்டும் போக்குவரத்திற்காகத் திறப்பதற்கான முறையான தேவைகளை ஈரான் தயாரித்து வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து சீரடைய வேண்டுமானால் தற்போதைய மோதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement